Friday, October 16, 2009

தீபாவளியும் மூடநம்பிக்கைகளும்

நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்றதற்காக நாம் தீபாவளியைக் கொண்டாடுகிறோம் என்றால்...நாம் வருடத்தின் அனைத்து நாட்கள் முழுவதும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும். இருந்திருக்க வேண்டும்.

புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்படும் ஹிரண்யன், ஹம்சன், ராவணன், இடும்பன், பகவன், ஹிரன்யச்சதா, அன்டாகசுரர் உள்ளிட்ட பல அரக்கர்களையும் இறைவனால் கொல்லப்பட்டவர்களே அல்லது அழிக்கப்பட்டவர்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் அழிக்கப்பட்ட நாட்களிலும் நாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் அல்லவா?. ஆனால் இல்லையே ?. -

உண்மையில் தீபாவளி என்றால் என்ன, ஏன் கொண்டாடுகிறோம் ?.

நரகாசுரனை அழித்து விட்டதால் மட்டும் நம் வாழ்வில் ஒரு ஒளி பிறந்துவிட்டதா?. தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் துளியும் சம்பந்தமில்லை. நரகாசுரன் வெறும் கதை மட்டுமே. வரலாறு அல்ல.

நமது மனதில், எண்ணங்களில், சிந்தனைகளில், பேச்சுக்களில், பார்வைகளில், செயல்களில் அசுரன் இன்னமும் குடி கொண்டிருக்கிறானே.வறுமையிலும், பசியிலும், பட்டினியிலும், சுகவீனங்களிலும், துக்கங்களிலும், துயரத்திலும் நம்மை வாட்டி வதக்கிக் கொண்டிருக்கிறானே.

கோபம், பொறாமை, அழுக்கு, புகைப்பது, குடிப்பது, ஆபாசப் பேச்சுகள், பார்வைகள், வக்கிர புத்திகள், ஏமாற்றுவது, புறங்க்கூருவது, பாலியல் வக்கிரமங்கள், சுய நலம், திருட்டு, வரதட்சணை இன்னும் பல நம்மில் ஒழிந்து கொண்டு குடியிருக்கும் அசுரனின் செயல்பாடுகள் அல்லவா ?.


ஒரு அறையின் இருட்டை போக்க எப்படி வெளிச்சம் தேவை படுகிறதோ, அது போல், நம்மில் இருக்கும் இருட்டு என்ற அசுரனை ஒழிக்க, அழிக்க 'ஞான ஒளி' 'அறிவு ஒளி' 'உண்மை ஒளி' என்ற வெளிச்சம் தேவை படுகிறது. அறையில் இருக்கும் இருட்டை போக்க தீபத்திலான விளக்கின் மூலம் வெளிச்சம் வந்தது. இந்த தீபத்தினால் ஒளியைப் போல நம்மில் இருக்கும் இருட்டை போக்க வேண்டும் என்று உவமையாகக் கூறப் பட்டது. 'தீப ஒளி' என்றும் அழைக்கப்பட்டது.

'தீப ஒளி' என்பதே காலப்போக்கில், பேச்சு வழக்கில் 'தீபாவளி' என்றானது. நம் மனதில் இருக்கும்அந்த வெளிச்சம் கடவுளைக் குறிக்கின்றது என்று அகஸ்தியர், தாயுமானவர், மற்றும் எண்ணற்ற சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். கல்லும் மண்ணும் வெறும் கல்லும் மண்ணும்தான் என்று கூறியிருக்கின்றனர்.

அக்காலத்தில் அடக்கு முறை அதிகாரங்களையும், ஆணவங்களையும், நாங்கள் சொல்வதுதான் நீதி, உண்மை என்று உரைத்துக் கொண்டிருந்த பிராமணர்கள் அதயெல்லாம் மறைத்து கல்லையும் மண்ணையும் வழிபடச் செய்து தீபாவளியைக் கொண்டாடும்படி வற்புறுத்தினர், வரலாற்றினை மாற்றி எழுதினர்.அமைத்தனர். இவையெல்லாம் 1000 வருடத்திற்கு முன்புதான் நடந்திருக்க வேண்டும். எனென்றால் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் தீபாவளி என்றொரு பண்டிகையைப் பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை.


ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்த்துவம் முதலான அனைத்து மதங்களும், மதங்களுக்குரிய வேதங்களிலும் 'ஒளி - வெளிச்சம்' என்பது கடவுளைக் குறிக்கும் என்றே சொல்கிறது. கடவுளுக்கு கல்லாலும், மண்ணாலும் செய்த உருவம் ஏதும் கிடையாது, அவையாவும் கல்லும் மண்ணும் மட்டுமே என்றும் கூறுகிறது.

ஆனால் பிராமணர்களால் இந்த உண்மை மறைக்கப்பட்டது.அக்காலத்தில் இஸ்லாம் மதமும், கிறிஸ்த்துவ மதமும் நம் நாட்டில் இல்லை. இருந்திருந்தால் நம் மக்களுக்கு உண்மைகள் தெரிந்திருக்கும். தீபாவளி மட்டுமல்ல, இன்னும் பல பண்டிகைகள் கொண்டாடியிருக்க மாட்டோம். உண்மையில் தமிழர்களின் திருவிழா என்றால் பொங்கல் மட்டுமே. ஆனால் காலப் போக்கில் எல்லாம் மாறி இன்று பொங்கலை விட வெகு சிறப்பாய் கொண்டாடுவது தீபாவளியைத் தான்.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தீபாவளி தமிழ்நாட்டில் இல்லை. சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம்வரையில் இருந்ததில்லை. இது வரலாறு.

உலகின் முடிவு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஓரளவாது உண்மையுடன் இருக்க முயற்சிப்போம்.

புத்தாடை, வண்ணமயமான வான வேடிக்கை வெடிகள், பலவகையான பலகாரங்களுக்கு செலவழிப்பதில் ஒரு சதவீதம் ஏழை எளியோருக்கு, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் யாரேனும் ஒருவருக்கு நம்மால் முடிந்த உதவி செய்தால் மனித நேயம் மலரும், அவர்களது வாழ்க்கையில் ஒரு ஒளி பிறக்கும்.

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?
திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர்.
கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர்.
செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின்றும், காமக்களியாட்டங்களை நடத்தினர். புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர்.

ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள்களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தையும், உடலையும் பார்த்து பலர் அவர்களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணையுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர். ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர்களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரிவிக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன்னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தையும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத்திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி,ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந்திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக்கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர்களின் மணிக்கட்டை முறி, தோலைக் கிழி, முழங்கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப்படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண்டாக வெட்டு, நீர்ப்பானையில் வைத்து வேகவை, பூமி விழுங்கட்டும், படுபாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாசமாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளையடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்கின்றனர். இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோமரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந்தன், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திராவிடர்களின் பெயர்கள் வருகின்றன. அவர்களுக்கு உதவிய துரோகிகளை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திராவிடர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுரகுலத்தை, தாஸ இனத்தை, பழமையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர்களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூதனர், பிசாசு, பூதம் என்று குறித்துள்ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.

ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன. இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக்கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர். இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.